Friday, April 9, 2010

வந்தே மாதரம் பாடலும் தேச பக்தியும்

வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதம் மற்றும் வங்க மொழியின் கலப்பில் உருவான பாடல். பாடல் ஆசிரியர் யார் என தெரியாவிட்டாலும் பாடலை 1773-ல் சில சாமியார்கள் பாடியுள்ளார்கள் என்பதை வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது. பஞ்சம் பீடிக்கப்பட்டிருந்த காரணத்தால் இவர்கள் கொள்ளையடித்து பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்கள் மொகலாயர்களின் ஆட்சிக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களது கலகத்தை நாவலாக வடிவமைத்தவர் வங்கப்புலவர் பக்கிம் சந்திரர். ஆனந்த மடம் என்ற தலைப்பைக் கொண்ட இந்த வங்காள மொழி நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் மஹேச குமார சர்மா. இந்த நாவலில் தான் முதன் முதலில் வந்தே மாதரம் பாடல் இடம் பெருகிறது. எனவே இந்த நாவல் 1876-ல் எழுதப்பட்டு 1882-ல் வெளியிடப்பட்டது. வங்கத்தில் புகழ் பெற்ற புலவர் பக்கிம் சந்திரர் எழுதிய நாவலில் உள்ள பாடல் என்பதால் வங்கத்தில் பரவலாக பாடப்பட்ட பாடல் பின்பு ரபின்தரநாத் தாகூர் 1896-ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பாடிய பிறகே இப்பாடல் தேசிய பாடலாக மாறியது. இனி இந்தப் பாடலின் வரலாற்றை சுறுக்கமாகப் பார்போம். 1773-ல் மொகலாயர்களின் ஆட்சி மீது கடுமையான எதிர்ப்புணர்வு கொண்டு அவர்களை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு சாமியார் கூட்டம் திரிந்தனர். இவர்கள் சந்தானர்கள் என அழைக்கப்பட்டார்கள். இவர்களது தலைவராக இருந்த சாமியார் சத்யநாதர். இந்த சந்தானர்கள் காட்டுக்குள்ளேயே தங்களது பாசறையை வைத்துக் கொண்டார்கள். அந்த பாசறைக்கு ஆனந்த மடம் என பெயரிட்டிருந்தார்கள். கொள்ளையடித்து தங்களது வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருந்தனர். சந்தானர்களில் முக்கியமானவராக இருந்த பவாநந்தன் என்பவர் ஒருமுறை 'நாங்களும் இன்று கொள்ளையடித்து தின்றோம். கொத்தவால் சாஹேபுக்கு இரண்டு மணங்கு அரிசி போய் கொண்டிருந்தது. அதை அடித்துக் கொண்டு வந்து எமது வைஷ்ணவ கோஷ்டிக்கு பிரசாதமாக விநியோகித்துக் கொண்டோம்” - (ஆனந்த மடம் தமிழ் மொழிபெயர்ப்பு பக். 80, மேலும் பார்க்க பக்.187) இவர்களது நோக்கம் முகலாய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் முஸ்லிம்களை அழிப்பதேயாகும். சத்யநாதர் ஒரு காரியமாக பிரயாணம் செய்துவிட்டு திரும்பி ஆனந்த மடம் வந்ததும் மற்ற சாமியார்கள் அங்கே வந்து குழுமினர். அப்போது சிலர் கொல்லுங்கள், மொட்டைத்தலையரை கொல்லுங்கள் என கூச்சல் போட்டனர் (பக். 243) இன்னொருவன் அண்ணே! மசூதிகளை இடித்து தள்ளிவிட்டு ராதா-மாதவ மந்திரத்தை கட்டும்படியான தினமும் வருமோ என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.(பக். 243) சந்தானர்களில் முக்கியமானவரான தீராநந்தன் என்பவர் சத்யநாதரிடம் பேசும்போது எல்லா சாமியார்களும் கொள்ளையடிக்க போயிருக்கிறார்கள். தற்போது முஸ்லிம்களின் கிராமங்களையும், பட்டுத் தொழிற்சாலைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டிற்கு போய் சேருவார்கள் என கூறியுள்ளார்.(பக். 265) இன்னும், முகமதியர்களை துரத்தியடித்தனர். சிலர் கூட்டம் கூட்டமாக துருக்கியத் தெருக்களுக்குச் சென்று அவர்கள் குடிசைகளுக்கு தீவைத்து சொத்துக்களை கொள்ளையடித்தனர். அநேக முஸ்லிம்கள் தாடிகளை சிரைத்துக் கொண்டு நெற்றியில் திருமண் காப்பு சாத்திக்கொண்டு ஹரிநாம சங்கீர்தனம் செய்யத் தொடங்கினர் என்றும் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக். 268) மேலும், இந்த முஸ்லிம்கள் ஈசுவரது துவேஷிகளாயிருக்கிறார்களென்று அவர்களை வம்சநாசம் செய்ய வேண்டும் என்பது மாத்திரமே எங்கள் சங்கல்பம் என்றும் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக். 177) விஷ்ணு பூஜையில் முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீவைப்பதும், அவர்களது பொருட்களை கொள்ளையடிப்பதும் ஒரு அம்சம் (பக். 205) சத்யநாதரின் குருவான ஒரு வைத்தியர் முகலாய ராஜ்யம் வீழ்ந்த பின்னர் சத்யநாதின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதை தெளிவாகக் கூறுகிறார். (பக். 304) எனவே சாமியார்களின் நோக்கம் முஸ்லிம் ராஜ்யத்தை வீழ்த்துவது, முஸ்லிம்களை அழிப்பதே ஆகும். ஆங்கிலேயர்களை இவர்கள் எதிரிகளாகக் கருதவில்லை. இவர்கள் கொள்ளையடித்து பிழைப்பு நடத்தி வந்த காரணத்தால் இவர்களை ஒடுக்க ஆங்கிலேயர்கள் படையை அனுப்பினர். இதனாலேயே ஆங்கிலேயருடன் மோதவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.(1773-ல் வரி வசூல் ஆங்கிலேயன் கையிலும் பாதுகாப்பு முகலாயர்கள் கையிலும் இருந்தது) ஒருமுறை பவாநந்தன் தங்களை ஒடுக்க வந்த கேப்டன் தாமஸைப் பார்த்து கூறியது ‘ஆங்கிலேயர் எங்களுக்கு சத்துருக்களல்லர். நீங்கள் ஏன் துருக்கர்களுக்கு துணையாய் வந்தீர்கள்? வாரும், உமக்கு உயிர்பிச்சை கொடுக்கிறோம். தற்காலத்துக்கு நீர் எம் கைதி. ஆங்கிலேயருக்கு வெற்றி உண்டாகுக. நாங்கள் உங்களுடைய நண்பர்கள்’ என்றான். (பக். 254) சத்யநாதரின் குரு, ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்தால்தான் சனாதன தர்மம் மலரும். எனவே ஆங்கிலேயரை எதிர்ப்பதை விட்டுவிட வேண்டும் என்று பணித்தார். மேலும் கூறுகையில் ஆங்கிலேயர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே கலகங்களைச் செய்ய தான் ஏவியதாக அறிவுறுத்துகிறார். (பக். 304-309, சத்யநாதருக்கு அவர் குருநாதர் வழங்கும் அறிவுரைகளும் கட்டளைகளும். இதே கருத்தை பக்கம் 210, 213 போன்ற பக்கங்களிலும் காணலாம்). முகலாய ஆட்சியை வீழ்த்தியது ஆங்கிலேயர் ஆட்சி உண்டாவதற்கே. சாமியார்கள் ஹிந்து ராஷ்ட்டிரா மூலம் சனாதன தர்மத்தை நிலைநாட்ட சத்யநாதரின் குருநாதர் குறிப்பிட்டது போல் ஆங்கிலேயர் ஆட்சி உண்டாக வேண்டும். எனவே ஆங்கிலேயரை சாமியார்கள் எதிரிகளாகக் கருதவில்லை. தாங்கள் வெற்றி கொண்ட சமயத்தில் ஹிந்து ராஜ்யம் அமைக்க முற்பட்டுள்ளார்கள் சாமியார்கள். (பக். 265. இதே கருத்தை பக்கம் 268, 304 ஆகியவற்றிலும் காணலாம்). பின்னர் ஆங்கிலேயரை எதிர்க்கும் சூழ்நிலையை தவிர்க்கவே ஹிந்து ராஜ்யம் அமைக்கும் முயற்சியை கைவிட்டனர். இந்த நாவலுக்கு பாயிரம் யாத்த சுதேசமித்திரன் ஆசிரியர் திரு. ஜி. சுப்பிரமணிய ஐயர் கூறும்போது ஆனந்தமடத்தை வாசிக்கும் தமிழருக்கு தழிலுலகத்தை மட்டும் தழுவிய அபிமானமுண்டாகாமல் ஆரிய தர்மத்தையும் அதை ஸ்தாபித்த பெரியோர்களின் புனிதப் பெயர்களையும் அலங்காரமாகக் கொண்ட ஆரியா வர்த்த முழுவதுவம் வியாபித்த அபிமானமே உண்டாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் (பக். 44) இப்போது வந்தே மாதரம் என்ன பதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை காண்போம். சத்யநாதர் மகேந்திரனை (நாவலில் வரும் கதாபாத்திரம்) எவ்வாறு சந்தானர்கள் இயக்கத்தில் இணைகிறார் என்பது பற்றி குறிப்பிடும்போது, முதலில் ஒரு பிரம்மாண்டமான விஷ்ணு விக்ரகத்தை காட்டுகிறார். அந்த விஷ்ணுவின் மடியில் ஒரு பெண் உருவம் வீற்றிருந்தது. அதையே மாதா என்று சத்யநாதர் மகேந்திரனுக்குக் கற்பித்து கொடுக்கிறார். மகேந்திரன் மாதா யார் என்று கேட்கும்போது சத்யநாதர் வந்தே மாதரம் சொல்லக் கேட்டுக் கொள்கிறார். பின்பு ஜகத்தாத்தீ தேவியின் விக்கிரகத்தைக் காட்டி, இது மாதா முன்பு இருந்தது என்று மகேந்திரனுக்கு கற்பித்து கொடுக்கிறார். அதை நமஸ்காரம் செய்ய சொல்கிறார் சத்யநாதர். பின்பு ஒரு இருண்ட சுரங்கத்தில் சத்யநாதர் மாதாவைப் பார் இப்படியாகிவிட்டாளே என்று அங்கலாய்த்துக் கொண்டார். அது காளியின் விக்ரகம். சுத்யநாதர் கண்களில் கண்ணீர் வந்தபடி வந்தே மாதரம் சொல்லக் கேட்டுக் கொண்டார். பின்னர் காளியை வணங்கிவிட்டு பின்னர் வேறொரு இடத்தில் பத்துத் கைகளுடன் கூடிய ஒரு விக்ரகத்தைக் காட்டி இதுதான் இனி எமது அன்னை அடையப்போகும் சொரூபம் என்று கூறி அந்த தாயே எதிரிகளை அழிப்பாள் என்று பலவாறாகப் புகழ்கிறார். அந்தத் தாயை பூஜிக்கும் போது மகேந்திரன் அந்தத் தாய் அடையும் சொரூபத்தை நாம் எப்போது காண்போம் என்று சத்யநாதரிடம் கேட்கும் போது, என்றைக்கு மாதாவின் சகல சந்தானர்களும் அவளை தாயேயென்று அழைப்பார்களோ அன்றைக்குதான் அவள் மனமுவந்து பிரத்யஷமாவாள் என்று கூறினார் (பக். 102-106) வந்தே மாதரம் என்பது இந்தச் சாமியார்கள் சனாதன கொள்கையில் அடிப்படையில் அமையப்பெறும் ஹிந்து ராஷ்டிராவை கொண்ட பாரத பூமியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் முகலாயர் சாம்ராஜ்யத்தை வீழ்த்த வந்த வௌ்ளையர்களை நண்பர்களாக கருதினர். ஒன்று முகலாயர்கள் தோற்க வேண்டும். மற்றொன்று வேறு ஒரு பிரதேசத்தவர் ஆட்சி செய்தாலே சனாதன தர்மம் வளரும் என்ற நம்பிக்கையில்தான் சாமியார்கள், ஆங்கிலேயனை ஆட்சியில் அமர்த்த கலகத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மொத்த இந்தியர்களை அன்னிய சக்தியான ஆங்கிலேயனிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியைக் கொண்டு வந்ததன் மூலம் பாரத மாதாவின் மங்களத்தை சாதித்து விட்டாய் என்று சத்யநாதரின் குருநாதர் தன் உபதேசத்தில் கூறுகிறார். (பக். 308) ஆங்கிலேய ஆட்சியில் ஹிந்துக்கள் அறிவிலும் குணத்திலும் திறனிலும் பெருமையடைய வேண்டும்(Hindu empowerment) என்று வலியுறுத்துகிறார். (பக். 307) இந்த நாவலை எழுதிய பக்கிம் சந்திரர் ஆங்கிலேயரிடம் மாஜிஸ்திரேட்டாக வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊடுருவி ஹிந்து ராஷ்ட்ரா அமைக்க வேண்டும் என்பது தான் இந்த சனாதன வாதிகளின் கனவு. இதுதான் வந்தே மாதரம் பாடலின் வரலாறு. இதை உண்மையான தேசபக்தர்கள் பாடுவார்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Blog Archive