Wednesday, April 28, 2010

நான் நிரபராதி - லஜ்பத் நகர் குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நவ்ஷாத் அறிக்கை

புதுடெல்லி:நான் ஒரு போலீஸ் அதிகாரியால் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பில் அநியாயமாக சிக்க வைக்கப்பட்டேன் என நேற்று முன்தினம் இவ்வழக்கில் நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட டெல்லியைச் சார்ந்த நவ்ஷாத் பத்திரிகையாளர்களுக்கு எழுதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கஷ்மீரி அல்லாத நபர்தான் முஹம்மது நவ்ஷாத். "எனக்கெதிராக எழுத்து மூலமாகவோ அல்லது வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஒரு போலீஸ் அதிகாரி என் மீது கொண்ட பகையால் நான் கடந்த 14 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டேன். அந்த போலீஸ் அதிகாரி எனது வாழ்க்கையையும் எனது குடும்பத்தினரின் வாழ்க்கையையும் சீரழித்துவிட்டார்".என்று நவ்ஷாத் கூறுகிறார். "என் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு எந்தவொரு ஆதாரமுமில்லை என்ற போதிலும் விசாரணை நீதிமன்ற நீதிபதி கூட என்னை குற்றத்திலிருந்து விடுவிக்க துணியாதது எனக்கு நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. போலீஸ் அதிகாரிக்கு எதிராக கொடுத்த புகாருக்கு பழிவாங்கவே அவர் என்னை இவ்வழக்கில் சிக்கவைத்தார்" என நவ்ஷாத் அவ்வறிக்கையில் கூறுகிறார். முஸ்லிம்களிடம் காண்பிக்கும் இத்தகைய அநீதிகளை பத்திரிகைகள் வெளிப்படுத்தவேண்டும் என்று நவ்ஷாத் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட 10 பேரில் 4 பேரை 14 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்ட பிறகு குற்றமற்றவர்கள் எனக்கூறி நீதிமன்றம் விடுதலைச் செய்திருந்தது. ஒரு கஷ்மீரி என்பதால் இந்தியாவில் தண்டிக்கப்பட காரணமா? என அவர்கள் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே இவ்வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஃபாரூக் அஹ்மத் கானின் தந்தை ஷாஃபி கான் கூறும்பொழுது; "டெல்லிக்கு வியாபாரத்திற்கு சென்ற ஃபாரூக்கை டெலிபோனில் தொடர்புக் கொண்ட பொழுது கிடைக்காததால் அவன் துபாய்க்கு கம்பள வியாபாரத்திற்கு சென்றிருப்பான்" என கருதியதாக ஷாஃபிகான் தெரிவித்தார். "பின்னர் ஒரு பத்திரிகையில் லஜ்பத் நகர் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டதாக புகைப்படத்துடன் செய்தி வந்ததைத் தொடர்ந்துதான் அவன் கைதுச் செய்யப்பட்டதை அறிந்தோம். வியாபாரத்திற்காக ஃபாரூக் நேபாளத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய பொழுதுதான் டெல்லி போலீஸின் சிறப்புபிரிவு அவனை கைதுச் செய்தது. குடும்பத்திற்கு ஒரேயொரு சுமைத் தாங்கியாக இருந்த ஃபாரூக்கிற்கு எந்தவொரு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில்லை" என அவர் கூறினார். லஜ்பத் நகர் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒரேயொரு பெண்ணான ஃபரீதா தர் என்ற ஃபரீதா பஹன்ஜி சுதந்திர கஷ்மீர் ஆதரவு தலைவராவார். தண்டனைக் காலம் முடிந்ததையடுத்து அவர் கஷ்மீர் ஸ்ரீநகர் சென்றார். அதேவேளையில் தண்டைனைத் தீர்ப்பிற்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டோரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். எந்தவொரு ஆதாரமுமில்லாமல் 3 பேருக்கு மரணத்தண்டனை விதித்துள்ளதாகவும், உயர்நீதிமன்றத்தில் அப்பீல் அளிக்கப் போவதாகவும் மரணத்தண்டனைக்கு விதிக்கப்பட்ட மிர்ஸா நிஸார் ஹுசைனின் சகோதரர் மிர்ஸா முஸஃபர் தெரிவித்தார். மிர்ஸா நிஸார் ஹுசைனின் மூத்த சகோதரனான மிர்ஸா இஃப்திகார் ஹுசைனை நீதிமன்றம் ஏற்கனவே குற்றமற்றவர் என தீர்ப்பளித்திருந்தது. செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment

Blog Archive